ஓணம் பண்டிகை: விமான கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு
ஓணம் பண்டிகையையொட்டி விமான கட்டணம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.;
சென்னை,
கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊரில் குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
ரெயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டது. ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக உள்ளதால் பெருமளவிலான கேரள மாநில பொதுமக்கள், விமானங்களில் சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கி உள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இதையடுத்து விமான கட்டணங்களும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து உள்ளன. அதன்படி, சென்னை - திருவனந்தபுரம் விமான கட்டணம் ரூ.4,359ல் இருந்து ரூ.19,903ஆக அதிகரித்துள்ளது. சென்னை - கொச்சி இடையே விமான கட்டணம் ரூ.3,713ல் இருந்து ரூ.11,798ஆக அதிகரித்துள்ளது. அதைபோல சென்னை - கோழிக்கோடு இடையேயான விமான கட்டணம் ரூ.3,629ல் இருந்து ரூ.10,286ஆக உயர்ந்துள்ளது.
பயணிகள் விமான கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல், ஓணம் பண்டிகையை சொந்த ஊரில், குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.