சக மாணவர்கள் முன்னிலையில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவன்... தர்மபுரியில் பரபரப்பு
சக மாணவர்கள் முன்னிலையில் பிளஸ்-2 மாணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான்.;
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே செக்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறான். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்த அவன், சக மாணவர்கள் முன்னிலையிலேயே பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான்.
இதனை அறிந்த சக மாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அந்த மாணவனை சிகிச்சைக்காக தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து, பிளஸ்-2 மாணவனை டாக்டர்கள் காப்பாற்றினர்.
அரசு பள்ளி வளாகத்திலேயே மாணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவகாரம் குறித்து, தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். பிளஸ்-2 மாணவன் வருகிற பொதுத்தேர்வுக்கு பயந்து பள்ளி வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றானா? அல்லது சக மாணவர்கள் மத்தியில் மாணவனை ஆசிரியர்கள் கண்டித்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றானா? என பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.