ராமதாசிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி
அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.;
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் நடந்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க டாக்டர் ராமதாஸ் கட்சியில் சரியாக செயல்படாதவர்களையும், டாக்டர் அன்புமணி ராமதாசின் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், திருவள்ளூர் மணவாள நகரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழு கூட்டத்தில் வழக்கறிஞர் பாலு, திலகபாமா, மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய பாமக நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
திருவள்ளூரில் முப்போகம் விளையும் 1,200 ஏக்கர் நிலத்தை பறித்து அமெரிக்க நிறுவனத்திற்கு தாரைவார்க்க திமுக அரசு துடிக்கிறது. ஏன் அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு தரிசு நிலம் அதிகம் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தை திமுக அரசு ஒதுக்கலாமே?. திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்டவுன் இன்று முதல் தொடங்கிவிட்டது.
சமூகநீதிக்காக பாமகவை தொடங்கிய ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். சமூகநீதி பற்றி பேச முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை. சமூகநீதியின் துரோகி திமுக. கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். 2026ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். அதற்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும். தமிழகத்தை ஆள தகுதியான ஒரே கட்சி பாமக.
ராமதாசுக்கு தந்தையர் தின வாழ்த்துகள். என் மீது ஏதும் கோபம் இருந்தால் ஐயா ராமதாஸ் என்னை மன்னித்து விடுங்கள். தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்றும் பெரிதல்ல. ராமதாஸ் ஐயா நீண்ட ஆயுளுடன், 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். தேசிய தலைவர்; நாட்டின் மூத்த அரசியல் தலைவர் ராமதாஸ். ராமதாஸ் ஐயா டென்ஷன் ஆக வேண்டாம். வருத்தப்படாதீர்கள், நீங்கள் உருவாக்கிய கட்சி இது; நீங்கள் கோபப்படக்கூடாது. கடினமான காலங்களை கடந்து வந்தவர், பல தியாகங்களை செய்தவர் ராமதாஸ். என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள்; மகனாக நான் செய்கிறேன். என்று கூறினார்.