கரூரில் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி

விஜய் பிரசாரத்துக்கு போலீசார் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.;

Update:2025-09-26 12:00 IST

கரூர்,

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க. தீவிர முன்னெடுப்பை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணியில் தற்போது விஜய் ஈடுபட்டுள்ளார். தனது முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை கடந்த 13-ந்தேதி திருச்சியில் தொடங்கினார்.

அதனைத்தொடர்ந்து 20-ந் தேதி நாகப்பட்டினம், திருவாரூரில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றார். அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. மக்கள் வெள்ளத்தில் விஜய் சென்ற பிரசார வாகனம் நீந்தி சென்றது. விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்ற விவாதமும் தற்போது வலைத்தளங்களில் தொடங்கி வைத்துள்ளது.

இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) நாமக்கல், கரூர் ஆகிய 2 பகுதிகளில் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதையடுத்து, கரூரில் விஜய் பிரசாரம் செய்ய பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு தவெக சார்பில் போலீசில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

கரூரில் விஜய் பிரசாரம் செய்வதற்காக லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, கரூர் பஸ் நிலைய மனோகரா கார்னர் ரவுண்டானா ஆகிய 3 இடங்களில் ஒன்றை ஒதுக்குமாறு காவல்துறையினரிடம் அனுமதி கோரினர். லைட் ஹவுஸ் கார்னர் ஒதுக்குவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அந்த இடத்தை ஒதுக்க இயலாது என காவல்துறை மறுத்து விட்டதாக கூறப்பட்டது.

இன்று காலை வரை விஜய் பிரசாரம் செய்யும் இடம் இறுதி செய்யப்படாத நிலையில், தற்போது கடும் நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் நின்று பேசுவதற்கு விஜய்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Tags:    

மேலும் செய்திகள்