புத்தேரி நான்கு வழி சாலைப் பணிகள்: கன்னியாகுமரி கலெக்டர் நேரில் ஆய்வு
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நெரிசல்களை குறைத்திடும் வகையில் நான்கு வழிச்சாலை பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.;
கன்னியாகுமரி மாவட்டம், தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் புத்தேரி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
பொதுமக்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து நாகர்கோவிலுக்கு வரும்போது, நாளுக்குநாள் வாகன நெரிசல் ஏற்படுவதாலும், தொலை தூரங்களுக்கு செல்ல சுற்றுப்பாதையினை பயன்படுத்துவதாலும், பயணத்தின் நேரம் அதிகமாகிறது.
இதனால் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நெரிசல்களை குறைத்திடும் வகையில் நான்கு வழிச்சாலை பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புத்தேரி வழித்தடத்தில் 4 வழிப்பாதையின் ஒரு பகுதியாக புத்தேரி குளத்தின் குறுக்கே ஒரு பெரிய பாலம் (வில் நாண் வகை) முன்மொழியப்பட்டுள்ளதோடு, 500 மீட்டர் (0.5 கிமீ) நீளம் கொண்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டுமானப் பணிகள் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த திட்ட செயல்பாட்டை பாதிக்கும் சிக்கல்கள் மற்றும் தடைகள் உள்ளனவா என துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டதோடு, அவற்றினை நிவர்த்தி செய்து கட்டுமான பணிகளை தொடர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட அலுவலர் வேல்ராஜ், உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியசிவா மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.