ராமேசுவரம் மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு; இலங்கை கடற்படை அட்டூழியம்
இலங்கை கடற்படைக்கு அஞ்சி மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் படகு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நஷ்டத்துடன் கரை திரும்பியதாக கூறப்படுகிறது.;
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவ்வாறு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ராமேசுவரத்தை சேர்ந்த படகு ஒன்று பழுதாகி நடுக்கடலில் நின்றது. இதையொட்டி அங்கு ஒரு ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் வந்தனர். பின்னர் அந்த படகின் அருகே சென்று மீனவர்களிடம் விசாரித்தனர்.
அதில் படகு பழுதானது தெரிந்ததால் அவர்களை கைது செய்யாமல் அங்கிருந்து சென்று விட்டனர். தொடர்ந்து பழுதான படகு மற்றொரு மீன்பிடி படகு உதவியுடன் கயிறு கட்டி ராமேசுவரம் கடற்கரைக்கு இழுத்து கொண்டு வரப்பட்டது. இதேபோல் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த மற்ற மீன்பிடி படகுகளை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டி அடித்தனர்.
இதனால் ராமேசுவரம் மீனவர்கள் இன்று குறைந்த அளவிலான மீன்களுடன் அவசர, அவசரமாக கரை திரும்பினார்கள். பெரும்பாலான படகுகளில் எதிர்பார்த்த அளவு மீன்கள் இல்லாததால் அதிக நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.