மதுரையில் துப்பாக்கியால் சுட்டு பள்ளி மாணவன் தற்கொலை

தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டிக்கு தயாராகி வந்த நிலையில், விபரீத முடிவை தேடிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update:2025-10-15 02:25 IST

மதுரை,

மதுரை புதூர் அருகே சம்பக்குளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வடிவேல். தனியார் வங்கி அதிகாரி. இவருடைய மனைவி கிருத்திகா. வக்கீல். இவர்களுடைய மகன் யுவன் (வயது 15). மேலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

துப்பாக்கிச்சுடும் போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை பெற்ற இவர், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தயாராகி வந்தார். இதனிடையே, வீட்டில் பெற்றோருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று அவருடைய பெற்றோர் கோவிலுக்கு சென்றுவிட்டனர். வீட்டில் யுவன் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இ்ந்த நிலையில் விபரீத முடிவு எடுத்து, துப்பாக்கிச்சுடும் போட்டிகளுக்கு பயன்படுத்திய ஒரு வகையான ஏர்கன் துப்பாக்கியை பயன்படுத்தி, தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு யுவன் தற்கொலை செய்துகொண்டார். இரவில் வீடு திரும்பிய பெற்றோர், வீட்டில் யுவன் தற்கொலை செய்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினர்.

இதுகுறித்து அறிந்த புதூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். யுவனின் உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags:    

மேலும் செய்திகள்