“மடைமாற்ற அரசியலுக்காக மெட்ரோவை கையிலெடுப்பதை நிறுத்துங்கள் முதல்வரே..” - நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு அரசின் மெட்ரோ அறிக்கையில் பல தவறுகள் இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
மெட்ரோ ரெயில் குறித்து வதந்திகளைப் பரப்பி மீண்டும் மீண்டும் அரசியல் செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே!
திடீரென கோவை மற்றும் மதுரை மெட்ரோ மீது அதீத அக்கறையைக் காட்டும் நீங்கள், முதலில் தங்களது திமுக அரசு சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் (DPR) உள்ள கூறுகளை முழுவதுமாக படித்தறிந்தீர்களா?
1. கோவை மெட்ரோவிற்கான விரிவான திட்ட அறிக்கையில், ஏற்கனவே தற்போது இருக்கும் பயண நேரத்துடன் ஒப்பிடுகையில், மெட்ரோ ரெயில் திட்டத்தால் பெரிய அளவில் நேர சேமிப்பு இல்லை என்று காட்டப்பட்டுள்ளது.
2. திமுக அரசு அனுப்பிய DPR-இல் 14 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள 2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி மக்கள்தொகை குறிப்பிடப்பட்டுள்ளது. 2025-இன் உத்தேச மக்கள்தொகை ஏன் குறிப்பிடப்படவில்லை?
3. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட Comprehensive Mobility Plan-இல், மதுரையில் உள்ள தற்போதைய பயணிகளின் எண்ணிக்கைக்கு BRTS (Bus Rapid Transit System)-ஏ போதுமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
4. இது போதாததற்கு, கோவையில் தாங்கள் சமர்ப்பித்துள்ள மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்தினால், அதிக அளவில் பொதுமக்களின் சொத்துகள் இடிக்கப்பட நேரிடும். இந்த லட்சணத்தில் தான் தாங்கள் சமர்ப்பித்துள்ள திட்ட அறிக்கை உள்ளது.
மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் மெட்ரோ அறிக்கையில் பல தவறுகள் இருப்பதைத் தாண்டி, மெட்ரோவிற்கான தேவையை நியாயப்படுத்தக்கூட முன்வரவில்லை. இனியாவது தங்களது மடைமாற்ற அரசியலுக்காக மெட்ரோவைக் கையிலெடுப்பதை நிறுத்துங்கள் முதல்வரே! அது தான் ஒரு நல்ல முதல்-அமைச்சருக்கு அழகு மட்டுமல்ல, பொறுப்பும் கூட!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.