முகத்தில் கட்டப்பட்ட பாலித்தீன் பை.. விஷவாயு செலுத்தி மாணவர் தற்கொலை - காரணம் என்ன..?
முகத்தில் பாலித்தீன் பையை கட்டிக்கொண்டு விஷவாயு செலுத்தி பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா ஆனையம்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் சம்பந்தம் கிராமத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சந்திரயோகேஷ் (வயது 17).
இவர் சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டு மாடியில் உள்ள அறையில் தூங்குவதற்காக சந்திரயோகேஷ் சென்றார். நேற்று காலை 7 மணியாகியும் அவர் எழுந்து வரவில்லை. இதனால் ராஜகோபால் தனது மகனை எழுப்புவதற்காக, அவரது அறைக்கு சென்றார். அங்கு சந்திரயோகேஷ் முகத்தில் பாலித்தீன் பை கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர், கதறி அழுதார்.
இதனிடையே சம்பவம் பற்றி அறிந்த பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெர்மன் லதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
அதில், சந்திரயோகேஷ் தனது முகத்தில் பாலித்தீன் பையால் தானாகவே சுற்றி டேப் ஒட்டிக்கொண்டு, விஷ தன்மை கொண்ட 'ஸ்பிரே பாட்டில்' மூலமாக வாயுவை செலுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. விஷவாயுவை பாலித்தீன் பை உள்ளே மட்டுமின்றி அவர் இருந்த அறை முழுவதும் அடித்து இருந்து இருக்கிறார். இதையடுத்து, இறந்து கிடந்த மாணவன் சந்திரயோகேஷ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்திரயோகேஷ் இதுபோன்று கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன? என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சி.பி.எஸ்.இ. பாடம் கஷ்டமாக இருந்ததால் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லை என மாணவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே தற்கொலை செய்வதற்கு முன்பு செல்போனில் உள்ள ஆதாரங்கள் அழிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.