அரசு மருத்துவமனைகளில் பணி நீட்டிப்பு என்பதே கிடையாது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தி.மு.க. அரசின் லட்சியம் 60 வயது முடிவடைந்தால் அவர்களுக்கு பணிநீட்டிப்பு என்பதே கிடையாது என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.;
சென்னை
அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியின் 2025-ம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழக வெள்ளிவிழா கூட்டரங்கில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கினார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் எந்த ஒரு அரசு ஆஸ்பத்திரிகளிலும் அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு என்பது கிடையாது. கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்திருக்கலாம். கலைஞர் நூற்றாண்டு அரசு ஆஸ்பத்திரி 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதில் டாக்டர்கள் அனுபவம் தேவை என்பதை கருத்தில் கொண்டு, தற்போதைய இயக்குனர் ஒரு வருடம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறார். வேறு எந்த உயர் மருத்துவ அலுவலா்களுக்கும் பணி நீட்டிப்பு கிடையாது. தி.மு.க. அரசின் லட்சியம் 60 வயது முடிவடைந்தால் அவர்களுக்கு பணிநீட்டிப்பு என்பதே கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.