"திராவிட மாடல் அரசின் மாபெரும் கனவு இதுதான்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உலக புத்தொழில் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.;
கோவை,
கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் உலக புத்தொழில் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உலகின் முன்னணி ஸ்டார்ட் அப் மையங்களுடன் தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனங்களை இணைக்கவும், புதிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்தவும் 2 நாட்கள் கோவையில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 42 நாடுகளை சேர்ந்த 300 பிரதிநிதிகள், 30 ஆயிரம் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தொழில் மாநாடுகள் நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டின் தொழில்துறை மட்டும் வளர்ச்சியடையாமல் ஒட்டுமொத்த மாநிலமும் வளர்ச்சியடைகிறது. தொழில் நிறுவனங்கள் மூலம் மாநிலம் வளர்கிறது, வேலைவாய்ப்புகள் மூலம் குடும்பங்களும் வாழ்கிறது, வளர்கிறது.
உலகின் தலை சிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதுதான் திராவிட மாடல் அரசின் மாபெரும் கனவு. கடந்த 4 ஆண்டுகளில் 6 மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் மத்திய அரசின் தளத்தில் புதிதாக பதிவாகி உள்ளன. 2032 ஆக இருந்த எண்ணிக்கை இப்போது 12,000-ஐ தாண்டியுள்ளது.
இதுல எனக்கு பர்ஷனலா மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்த 12,000-ல் சரிபாதி பெண்கள் தலைமையேற்று நடத்துகிற நிறுவனங்கள். புத்தொழில் நிறுவனங்களில் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாடு 4 ஆண்டுகளில் முதலிடத்தை பிடித்துள்ளது.
கோவையில் அடுத்த மாதம் ரூ.175 கோடியில் செம்மொழிப் பூங்காவை திறக்க உள்ளோம். விரைவில் பெரியார் நூலகம், கிரிக்கெட் ஸ்டேடியம் என அடுத்தடுத்து திறக்க உள்ளோம். தொழில் நகரமான கோவை வளர்ச்சிக்கு துணை நிற்கும் திராவிட மாடல் அரசின் பயணம் திராவிட மாடல் 2.0-விலும் தொடரும்
2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான முனைப்புடன், நம் அரசு செயல்பட்டு வருகிறது. பெரிய தொழில்கள் மட்டுமல்ல, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களும் இதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.