அதிகாரியை சிக்கவைக்க பணத்தை மறைத்து வைத்த தீயணைப்பு வீரர் உட்பட 2 பேர் கைது

கைகளில் கிளவுஸ், முகமூடி அணிந்து வந்த நபர் கவர்களில் பணத்தை கொண்டு வந்து நெல்லை மண்டல தீயணைப்பு துணை இயக்குனர் அலுவலத்தில் மறைத்து வைத்து செல்வது உறுதியானது.;

Update:2025-11-29 08:27 IST

திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துணை இயக்குனராக சரவணபாபு பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகத்தில் நவம்பர் 18ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அவரது இருக்கைக்கு எதிரே உள்ள அலமாரியில் இருந்து ரூ.2 லட்சத்திற்கும் மேலான ரொக்க பணத்தை 6 கவர்களிலிருந்து எடுத்துச் சென்றனர்.

கணக்கில் காட்டாத பணம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்துக்கு முன்தினம், தீயணைப்பு துணை இயக்குனர் அலுவலகத்திற்கு எதிர் வீட்டில் உள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 17ம் தேதி அதிகாலை 12:10 மணிக்கு கைகளில் கிளவுஸ், முகமூடி அணிந்து வந்த நபர் கவர்களில் பணத்தை கொண்டு வந்து அலுவலகத்தில் மறைத்து வைத்து செல்வது உறுதியானது.

இதுகுறித்து துணை இயக்குனர் சரவணபாபு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணியிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் பெருமாள்புரம் போலீசார் விசாரித்தனர். அதில் பெரிய நெட்ஒர்க் இந்த சம்வத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர் ஆனந்த் (வயது 30), அவரது அக்காள் மகன் முத்துசுடலை(29) ஆகியோர் கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த திட்டத்தின் பின்னணியில் தீயணைப்பு துறை உயர்அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகளும் உள்ளனர். இந்த வழக்கை விசாரிக்கும் ஒரு அதிகாரி கூறுகையில், 2021ல் சரவணபாபு நாகர்கோவிலில் தீயணைப்பு அதிகாரியாக பணியாற்றும்போது, இரண்டு பெரிய நிறுவனங்கள் தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றினை போலியாக வைத்திருந்ததை கண்டுபிடித்தார்.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் இவ்வாறு போலியான தீயணைப்பு தடையின்மை சான்றிதழ்கள் வழங்கிய சென்னை தீயணைப்பு வீரர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்ற சரவணபாபுவிற்கு எதிராக, பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் ஒரு குழுவினராக சேர்ந்து கொண்டு அவரை பழிவாங்க திட்டமிட்டனர். இந்தக் குழுவில் தீயணைப்பு துறையின் தற்போதைய சென்னை உயரதிகாரி முதற்கொண்டு சாதாரண வீரர்கள் வரை உள்ளனர். இவர்களுடன் லஞ்ச ஒழிப்பு போலீசில் பணியாற்றும் சிலருக்கும் தொடர்பு உள்ளது.

சரவணபாபு அலுவலகத்தில் அதிகாலையில் பணத்தை வைத்து சென்ற நபர் இன்னும் கைதாகவில்லை. இதே உயர் அதிகாரிகளின் கும்பலால் மேலும் பல தீயணைப்பு அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் போலியான புகார்களில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நெட்ஒர்க் முழுவதும் விசாரித்து அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்