துணை ஜனாதிபதி இன்று வருகை: கோவையில் டிரோன் பறக்க தடை
துணை ஜனாதிபதி வருகையை ஒட்டி கோவையில் இன்று டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.;
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறார். இதையொட்டி கோவையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “துணை ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு காரணம் கருதி கோவை மாவட்டம் ஒன்னிபாளையம் கருப்பராயன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம் ஆகிய பகுதிகள் மற்றும் மிக முக்கிய விருந்தினர் பயணிக்கும் சாலைகள் ஆகியவை சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது. மேற்கண்ட பகுதிகளில் இன்று இரவு 8 மணி வரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை மீறி டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.