'தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்?' - ஐகோர்ட்டு கேள்வி
மத்திய அரசு 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த இடஒதுக்கிட்டிற்கான மாணவர் சேர்க்கை நடப்பு கல்வி ஆண்டில் இதுவரை தொடங்கவில்லை என்று கூறி கோவையை சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி ஈஸ்வரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில் நடப்பு கல்வி ஆண்டில் உடனடியாக தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை தொடங்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதி லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், "கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான மாணவர்களின் கல்வி கட்டணத்தில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகிறது. ஆனால் மத்திய அரசு 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை. இந்த ஆண்டுகளில் 100 சதவீத நிதியையும் மாநில அரசே ஒதுக்கியுள்ளது.
மத்திய அரசு நிதி ஒதுக்காததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டுள்ள மாநில அரசு, இந்த விவகாரத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க வரும் மே 28-ந்தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது" என்று தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, "தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சில காரணங்களால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.
அப்போது, "என்ன காரணத்திற்காக நிதி ஒதுக்கப்படவில்லை?" என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, "மத்தியில் ஆளும் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி. கூட இல்லை என்பதால் நிதி ஒதுக்கப்படவில்லை" என தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார்.
இதையடுத்து, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதி எவ்வளவு என்பது குறித்த விவரங்களை நாளை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.