இந்தியா நிச்சயம் தாக்குதல் நடத்தும்; பாக். பாதுகாப்புத்துறை மந்திரி
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.;
லாகூர்,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காஷ்மீர் தாக்குதலை ஈடுபட்டவர்கள் நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு தண்டனை கொடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் மீது இந்தியா நிச்சயம் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி குவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். ராய்டர்ஸ் செய்தி முகமைக்கு முகமது ஆசிப் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, எங்கள் மீது இந்தியா நிச்சயம் தாக்குதல் நடத்தும். எங்கள் படைகளை நாங்கள் தயார் நிலையில் வைத்துள்ளோம். இந்த சூழ்நிலையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்பது குறித்து அரசிடம் ராணுவம் ஏற்கனவே தெரிவித்துவிட்டது. பாகிஸ்தான் உச்சபட்ச உஷார் நிலையில் உள்ளது. எங்கள் நாட்டின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்' என்றார்.