உதகையில் வேட்புமனு தாக்கலின்போது தடியடி - போராட்டம்

உதகையில் வேட்புமனு தாக்கலின்போது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-25 10:14 GMT

நீலகிரி,

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் இருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்தனர். முதலில் பா.ஜ.கவினர் உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்தனர்.

இந்த நிலையில் எல்.முருகன் மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வர தாமதமானதால் பா.ஜ.க. ஊர்வலம் தாமதமாக தொடங்கியது. இதற்குள் அ.தி.மு.கவினர் அங்கு திரண்டனர். இருவரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பா.ஜ.கவினரின் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.கவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.கவினரை ஊர்வலத்தை சீக்கிரம் முடிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். இதற்கு பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், போலீசாரை கண்டித்து முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உதகை எஸ்.பியை பணியிடை நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்