நாடாளுமன்ற தேர்தல்: தி.நகரில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-19 03:24 GMT

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. காலையில் இருந்தே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வாக்களிக்க முடியாமல் காத்திருக்கின்றனர்.

அதைபோல அரியலூர் மாவட்டம் கீழையூர் வாக்குச்சாவடியில் 2 இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் வாக்குச்சாவடி மையம் 222ல் இயந்திரக்கோளாறால் வாக்குப்பதிவு 30 நிமிடம் தாமதமானது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். நெல்லை தச்சநல்லூர், புதுக்கோட்டை, திருச்சி மேற்கிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. கோளாறை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்