உண்மையான பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசை திருப்புகிறார் - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் முன்னேற்றம், உண்மையான பிரச்சினை குறித்து பிரதமர் மோடி பேசுவதில்லை என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2024-04-24 12:29 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை மறுநாள்) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,

"பிரதமர் மோடி மக்களுக்காக ஏதும் செய்யவில்லை. உண்மையான பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார். விலைவாசி உயர்வு, மக்களை பாதிக்கும் பிற பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிரதமர் தவறிவிட்டார். அதற்கு பதிலாக பொருத்தமற்ற விசயத்தில் கவனம் செலுத்துகிறார்.

பா.ஜ.க. ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்காக உயர்ந்துள்ளது. இந்த மக்களவை தேர்தல் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அரசமைப்பை பாதுகாப்பதற்கான வாய்ப்பு. அந்த வாய்ப்பை நாம் தவறவிடக்கூடாது. நாட்டின் முன்னேற்றம், உண்மையான பிரச்சினை குறித்து பிரதமர் மோடி பேசுவதில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 10 ஆண்டுகளாக கடுமையாக உயர்ந்துள்ளது. அதேபோல் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்