3-வது டெஸ்ட்: ஜடேஜா போராட்டம் வீண்... பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.;
image courtesy:twitter/@englandcricket
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 2-வது இன்னிங்சில் 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 4-வது நாள் முடிவில் 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் அடித்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்தியாவின் வெற்றிக்கு 135 ரன் தேவை. அதே சமயம் இங்கிலாந்து வெற்றிக்கு 6 விக்கெட் தேவை என்ற பரபரப்பான சூழலில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
ரிஷப் பண்ட் - கே.எல்.ராகுல் பேட்டிங்கை தொடங்கினர். ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரிஷப் பண்ட் 9 ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து ஜடேஜா களமிறங்கினார். நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 39 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் வீழ்ந்தார். பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இவர்கள் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால் பின்வரிசை வீரர்களின் கணிசமான ஒத்துழைப்புடன் ஜடேஜா தனி ஆளாக போராடி அணிக்கு நம்பிக்கை அளித்தார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரெட்டி ஜடேஜாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இங்கிலாந்து பந்துவீச்சை ஒரளவு தாக்குப்பிடித்து விளையாடிய இந்த ஜோடி 30 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. நிதிஷ் ரெட்டி 13 ரன்களில் உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் அவுட்டானார். அடுத்து ஜடேஜா உடன் பும்ரா கைகோர்த்தார்.
இருவரும் இணைந்து டிரா செய்யும் நோக்கில் விளையாடினர். நிதானமாக ஆடிய இவர்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு பெரிய தலைவலியாக அமைந்தனர். அதிக டாட் பந்துகளை எதிர்கொண்ட இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இந்த ஜோடியில் பெரும்பாலும் ஸ்ட்ரைக்கை ஜடேஜா தன்வசம் வைத்துக்கொண்டார். 20 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்து விளையாடிய இந்த ஜோடியை இறுதியில் பென் ஸ்டோக்ஸ் உடைத்தார். அவரது பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 5 ரன்களில் (54 பந்துகள்) ஆட்டமிழந்தார்.
கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய முகமது சிராஜும் ஜஸ்பிரித் பும்ரா செய்த வேலையை அப்படியே செய்தார். பெரும்பாலும் ஸ்ட்ரைக்கை தன்வசம் வைத்து ஜடேஜா போராடினார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறினார். இதனால் ஆட்டம் பரபரப்பாகவே நகர்ந்தது. முடிவில் சோயிப் பஷீர் இந்தியாவின் கடைசி விக்கெட்டை வீழ்த்தி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது பந்துவீச்சில் சிராஜ் போல்டானார். இதனால் ஜடேஜாவின் போராட்டம் வீண் ஆனது.
2-வது இன்னிங்சில் 74.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனி ஆளாக போராடிய ஜடேஜா 61 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி 23-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.