குல்தீப் யாதவ் அபார பந்துவீச்சு... வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்களில் ஆல் அவுட்

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார்.;

Update:2025-10-12 13:05 IST

image courtesy: @BCCI

புதுடெல்லி,

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்குமான முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175 ரன்னும், சுப்மன் கில் 129 ரன்னும் எடுத்தனர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷாய் ஹோப் 31 ரன்களும், டெவின் இம்லாக் 14 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட் , குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் நடந்து வருகிறது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 81.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அலிக் அத்தானஸ் 41 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா தற்போது வரை 270 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்