விராட், ரோகித் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டுமா..? சுப்மன் கில் விளக்கம்

விராட் மற்றும் ரோகித் இருவரையும் உள்ளூர் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.;

Update:2025-10-26 14:57 IST

image courtesy:PTI

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த தொடரின் மூலம் இந்திய முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 7 மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு திரும்பினர். இந்த வாய்ப்பில் முதல் போட்டியில் சொதப்பிய ரோகித் கடைசி 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். மறுமுனையில் விராட் கோலி முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆகி ஏமாற்றினாலும் கடைசி போட்டியில் சிறப்பாக ஆடி தனது தரத்தை நிரூபித்தார்.

இவர்கள் இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வரை தொடர்ந்து விளையாட முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடும் அவர்களால் உடல் தகுதியை தக்கவைத்து அதுவரை சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற கேள்விக்குறி பலமாக நிலவுகிறது.

இதனிடையே தொடர்ந்து அவர்கள் பார்மில் இருக்க விராட் மற்றும் ரோகித் இருவரையும் உள்ளூர் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக விஜய் ஹசாரே டிராபி தொடரில் அவர்களை விளையாட வைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் விஜய் ஹசாரே தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விளையாடுவார்களா? என்ற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “தற்போது, ​​நாங்கள் அது குறித்து எந்த விவாதமும் நடத்தவில்லை. தென் ஆப்பிரிக்க தொடருக்கு அதிக இடைவெளி இல்லை. தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து தொடருக்கு இடையே சிறிது இடைவெளி உள்ளது. தென் ஆப்பிரிக்கா தொடருக்குப் பிறகு நாங்கள் இது குறித்து முடிவு செய்வோம்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்