வாருங்கள் தோழரே! சந்திரயான்-3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திய சந்திரயான்-2 ஆர்பிட்டர்


வாருங்கள் தோழரே! சந்திரயான்-3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திய சந்திரயான்-2 ஆர்பிட்டர்
x
தினத்தந்தி 21 Aug 2023 9:20 AM GMT (Updated: 21 Aug 2023 10:39 AM GMT)

சந்திரயான்-3 லேண்டர் நிலவை நோக்கிய தனது பயணத்தில், சந்திரயான் 2 ஆர்பிட்டரோடு தொடர்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவின் புவிவட்ட சுற்றுப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. விக்ரம் லேண்டர், விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த பிறகு, நிலவின் முதல் படங்களை பகிர்ந்தது.

லேண்டர் இமேஜர் (எல்ஐ) கேமரா-1 மூலம் எடுக்கப்பட்ட பிரமிக்க வைக்கும் படங்களை, இஸ்ரோ டுவிட்டரில் பகிர்ந்தது. படங்களின் தொகுப்பு நிலவில் உள்ள வெவ்வேறு பள்ளங்களை காட்டியது.

தொடர்ந்து ஆகஸ்டு 23-ந்தேதி மாலை 6.04 மணியளவில் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்தது. இதனால், நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவை நோக்கிய தனது பயணத்தின்போது, சந்திரயான்-2 ஆர்பிட்டரோடு தொடர்பை ஏற்படுத்தி உள்ளது என்ற தகவல் வெளிவந்து உள்ளது. இதனை இஸ்ரோ இன்று உறுதிப்படுத்தி உள்ளது.

சந்திரயான்-3 லேண்டரை வெல்கம் பட்டி (வாருங்கள் தோழரே) என சந்திரயான்-2 ஆர்பிட்டர் வரவேற்றது.

நிலவில், நாளை மறுநாள் லேண்டர் தரையிறங்க உள்ள நிலையில், இந்த தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சந்திரயான்-3 லேண்டர் மற்றும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் இடையே இருவழி தொலைதொடர்பு ஏற்பட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து லேண்டரை தொடர்பு கொள்ள வழி ஏற்பட்டு உள்ளது.

சந்திரயான்-2 விண்கலம் ஏவப்பட்டபோது, அதன் ஆர்பிட்டர் நிலவில் தரையிறங்க முற்பட்டபோது, தரை கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால், அந்த திட்டம் தோல்வியடைந்தது.

இதனை தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கல திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த விண்கல பயண திட்டம் வெற்றி பெறும் என விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது.


Next Story