
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நிலையில், நேற்று காலை கீழநத்தம் பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவர் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக வந்துள்ளார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தபோது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று மாயாண்டியை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கும்பலிடம் இருந்து தப்பித்து நீதிமன்ற வளாகத்தில் ஓடினார்.
இருப்பினும் அந்த கும்பல் மாயாண்டியை துரத்தி சென்று சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் கவன குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்த நெல்லை காவல் ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.






