விவசாயிகள் மிளகு, உலர் திராட்சைகளை விற்பனை... ... 21-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-21 14:21:05.0
t-max-icont-min-icon

விவசாயிகள் மிளகு, உலர் திராட்சைகளை விற்பனை செய்யும்போது எந்தவித ஜி.எஸ்.டி. வரியும் இல்லை - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 55-வது ஆலோசனை கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கவுன்சில் கூட்டத்தில், ஆயுள், மருத்துவ காப்பீடு மீதான வரியை குறைக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி மாதம் நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களில் இருந்து காக்கும் ஜீன் தெரப்பி சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி கர்னல் மீதான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. விவசாயிகள் பச்சை மிளகு, காய்ந்த மிளகு, உலர் திராட்சைகளை விற்பனை செய்யும்போது எந்தவிதமான ஜி.எஸ்.டி. வரியும் இல்லை.

ஆனால் அவற்றை, வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்யும்போது அவற்றுக்கு வரி உண்டு. அரசு திட்டங்கள் மூலம் இலவசமாக தரப்படும் உணவுகளின் மூலப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

சிறு நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. வரி துறையில் பதிவு செய்யும் நடைமுறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி கடன் பெற்றவர்கள் விதிமுறைகளை பூர்த்தி செய்யாததன் மூலம் விதிக்கப்படும் அபராதத்தின் மீது எந்த ஜி.எஸ்.டி.யும் இல்லை. உணவு டெலிவரி சேவை மீது ஜி.எஸ்.டி. விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story