
ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் - ஆர்.பி. உதயகுமார்
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 2025 ஆம் ஆண்டு முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையோடு ஜனவரி 6-ந்தேதி தொடங்க இருப்பதாக பேரவை தலைவர் அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே எடப்பாடியார் பேசும்போது, நேரலை துண்டிக்கப்பட்டு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.
மக்கள் பிரச்சனையை பேசுகின்ற சட்டமன்றத்தில், மக்களுக்கு தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுவது தான் சட்டமன்றம். ஆனால் அங்கே என்ன நடைபெறுகிறது? எதிர்க்கட்சியினுடைய உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகிறது.
கேள்வி நேரத்தில் கூட கேள்வி கேட்பதற்கு உரிமை மறுக்கப்படுகிறது. மக்களின் குறைகளை சட்டமன்றத்திலே எடுத்து வைத்தால்தானே, அது அமைச்சர்களுடைய கவனத்திற்கு சென்று அதற்கு தீர்வு கிடைக்கும். வருகிற ஜனவரி 6-ந்தேதி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. அந்த கூட்டத்தொடரில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடியே ஆண்டுக்கு100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






