
தாம்பரம் அருகே 3 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதல்
சென்னை வண்டலூரில் இருந்து தாம்பரம் நோக்கி வருகின்ற சாலையில் வாகனங்கள் பரபரப்பாக சென்றுகொண்டிருந்தன. இந்த நிலையில் பெருங்களத்தூர் ஏரிகரை சிக்னல் அருகே கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பஸ் ஒன்று கார் மீது மோதியது. இதனால் அந்த கார் அதற்கு முன் இருந்த மற்றொரு காரினை மோதியது.
அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் அந்த சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பஸ் மோதியதால் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்ததால் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த மோதல் காரணமாக கார் டிரைவருக்கும் அரசு பஸ் டிரைவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், போலீசாரிடம் பஸ் பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்பட்டதாக டிரைவர் தெரிவித்தார். ஆனால் அந்த பஸ் அங்கிருந்து புறப்படும் போது பிரேக் பிடித்ததால் டிரைவரின் கவனக்குறைவு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்காலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






