
‘இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன’ - மோகன் பகவத்
நாக்பூரில் பிரம்ம குமாரிகள் விஸ்வ சாந்தி சரோவரின் 7-வது நிறுவன நாள் விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது இந்தியாவுக்கு அதிக வரி விதித்த அமெரிக்காவை சாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
"இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன. இந்தியா வலுவாக வளர்ந்தால் தங்களுக்கு என்ன நேரிடும், தங்கள் நிலை என்னவாகும் என்று உலக நாடுகள் நினைக்கின்றன. இதன் காரணமாகவே இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது.
ஆனால் நாம் எதுவும் செய்யவில்லை. அவர்கள் ஏழு கடல் தொலைவில் இருக்கிறார்கள். அவர்களுடன் நமக்கு எந்த தொடர்பும் இல்லை. பின்னர் ஏன் இந்த பயம்? மனிதர்களும் சரி, நாடுகளும் சரி தங்கள் உண்மையான சுயத்தை புரிந்துகொள்ளாவிட்டால் பிரச்சினைகளை தொடர்ந்து சந்திப்பார்கள். மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுவதுடன், பயத்தை வென்றால் நமக்கு எதிரிகள் யாரும் இருக்க மாட்டார்கள்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






