
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? நயினார் நாகேந்திரன் பதில்
திருச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, பா.ஜனதா இந்தியா முழுவதும் 1,200 எம்.எல்.ஏ.க்கள், 330 எம்.பி.க்களையும் கொண்ட கட்சி. பா.ஜனதா - அ.தி.மு.க. பொருந்தா கூட்டணி என கூறுபவர்களுக்கு எத்தனை எம்.பி.க்கள், எத்தனை எம்.எல்.ஏ.க்கள், எத்தனை கவுன்சிலர்கள் இருக்கிறார்கள்? ஒருவரை பற்றி கூறுவதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும். எப்பொழுது தேர்தல் வந்தாலும் வீட்டிற்கு அனுப்பக்கூடிய அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். அவர்தான் முதல்-அமைச்சர் வேட்பாளர். நெல்லையில் அமித்ஷாவின் உரைக்குப் பின்பு எடப்பாடி பழனிசாமி மனவருத்தத்தில் இருப்பதாக கேட்கிறீர்கள். யாரும் மன வருத்தத்தில் இல்லை. தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி இனி அடிக்கடி வருவார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைவார்கள். பலமான கூட்டணி அமைத்துதான் வெற்றி பெற வேண்டும் என அவசியம் இல்லை. நிச்சயமாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வரும். தி.மு.க. அரசு வீட்டுக்கு அனுப்பப்படும். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா? என கேட்கிறீர்கள். தி.மு.க. அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்கிற நோக்கத்தோடு எம்.ஜி.ஆர். கொள்கையை பின்பற்றுபவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






