
விஜய் பிரசாரத்துக்கு போலீசார் விதித்த 20 நிபந்தனைகள்
நாமக்கல்லில் இன்று (சனிக்கிழமை) விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். அவரது பிரசாரத்திற்கு 20 நிபந்தனைகளை விதித்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
அதன்படி, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தக் கூடாது. கட்சி தலைவர் விஜய் வரும் வாகனத்தின் பின்னால் 5 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக செல்லக்கூடாது. விஜய் வரும் வழியிலும், பிரசாரம் நடைபெறும் இடத்திலும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
கூட்ட நெரிசலில் பெண்கள் மற்றும் முதியவர்கள் சிக்கிக் கொள்ளாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். கம்பு, குச்சி மற்றும் பிற ஆயுதங்கள் எதையும் வைத்திருக்கக் கூடாது.
பிற சாதியினர் மற்றும் மதத்தினர் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகன சாகசங்களில் ஈடுபடக்கூடாது.
பரப்புரையின்போது பொது சொத்திற்கோ, தனியார் சொத்திற்கோ சேதம் ஏற்படுத்தக் கூடாது. மீறினால் கட்சியினரே பொறுப்பேற்க வேண்டும். உயரமான கட்டிடங்கள் மற்றும் மின்சார கோபுரங்கள் மீது ஏறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
மேலும் பிரசாரத்திற்கு வரும்போதும், பிரசாரம் முடிந்து செல்லும் போதும் "ரோடு ஷோ" நடத்தக்கூடாது என்பன உள்பட 20 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






