வலி நிறைந்த நாட்கள்... “மரியான்” படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்த நடிகை பார்வதி

தனுஷின் ‘மரியான்’ படப்பிடிப்பில் தான் மோசமான அனுபவத்தைச் சந்தித்ததாக நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகையான பார்வதி, தமிழில் வெளியான ‘பூ’, ‘மரியான்’, ‘உத்தம வில்லன்’, ‘சென்னையில் ஒருநாள்’, ‘தங்கலான்’ உள்பட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவிலும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தனுஷின் ‘மரியான்’ படப்பிடிப்பின் போது தன்னை உடை மாற்ற அனுமதிக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “‘மரியான்’ படத்தின் ஒரு காட்சியில் தண்ணீரில் முழுவதுமாக நனைந்தபடி நடித்தேன். அது கதாநாயகனுடன் வரும் காதல் காட்சி. அப்போது மாற்றுவதற்கு நான் உடைகள் கொண்டு வரவில்லை. என் தேவைகளைக் கவனித்துக்கொள்ள அங்கும் யாரும் இல்லை. ஒரு கட்டத்தில், உடை மாற்றுவதற்காக நான் என் ஓட்டல் அறைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்ல வேண்டியிருந்தது. அதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. எனக்கு ‘பீரியட்’ என்றும், நான் கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்றும் சத்தமாகச் சொன்னேன்” என்ற பார்வதி, ‘மரியான்’ படப்பிடிப்புத் தளத்தில், தன்னைச் சேர்த்து மொத்தம் 3 பெண்கள் மட்டுமே பணிபுரிந்ததாகவும் அது தனக்கு கடினமாக இருந்ததாகவும் தனக்கு ஆதரவாக அங்குயாருமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.






