

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. பேச்சுலர் வெற்றிக்குப் பின் தமிழில் பெரிய நாயகியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது, முகன் ராவுடன் 'மதி மேல் காதல்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தெலுங்கில் பாகல் படத்தை இயக்கிய நரேஷ் குப்பிலியின் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், சில காரணங்களால் திவ்ய பாரதி விலகினார். தொடர்ந்து, இயக்குநரும் வெளியேறினார். ஆனால், இயக்குநர் நரேஷ் சமூக வலைதளங்களில் நடிகை திவ்ய பாரதியை மறைமுகமாகத் தாக்கி வந்ததுடன் சிலாகா என்கிற வார்த்தையையும் பயன்படுத்தினார். அப்படியென்றால், தெலுங்கில் பெண்களைத் தவறாக குறிக்க பயன்படுத்தப்படும் வார்த்தையாம்.
இந்நிலையில், தெலுங்கு திரைப்படமான "கோட்" படப்பிடிப்பில் தான் அனுபவித்த கசப்பான தருணங்களை நடிகை திவ்யபாரதி வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.அதில் பெண்களை இந்தச் சொல்லில் அழைப்பது நகைச்சுவை அல்ல. இது பெண்கள் மீதான வெறுப்பின் பிரதிபலிப்பு. இந்த இயக்குநர் படப்பிடிப்பு தளத்திலும் இதே மாதிரிதான் நடந்து கொண்டார். தொடர்ந்து, பெண்களை அவமரியாதை செய்ததுடன் தன் கலைக்கே துரோகம்செய்தார். எனக்கு ஏமாற்றம் என்னவெனில் இது படத்தின் நாயகன் சுடிகாலி சுதீருக்கு தெரிந்திருந்தும் அவர் இயக்குநரின் போக்கை அனுமதித்ததுதான். இதனால், கேலி, கிண்டல்கள் இல்லாத இடத்தில்தான் பணிபுரிய ஆசைப்படுகிறேன் என்றார்.
திவ்ய பாரதியின் இந்த எதிர்வினை சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திவ்யபாரதியின் இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குனர் நரேஷ் தரப்பில் இருந்து தற்போது வரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை.
View this post on Instagram