"கரூர் சம்பவம் குறித்த அஜித்தின் கருத்தை வரவேற்கிறேன்"- நடிகர் பார்த்திபன்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நடிகர் அஜித்குமார் தெரிவித்த கருத்தை வரவேற்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தவெக தலைவரும் நடிகருமான விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அஜித் பேசும் போது, "கரூர் கூட்ட நெரிசலை வைத்து தமிழ்நாட்டில் நிறைய நடந்து விட்டது, கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பு அல்ல, நாம் எல்லோருமே பொறுப்பு. ரசிகர்களின் அளவு கடந்த எல்லையற்ற அன்பு இதுபோன்ற நிகழ்வுகளை உருவாக்குகிறது. கூட்டத்தால் நாம் மிகவும் வெறித்தனமாகி விடுகிறோம். இது முழு சினிமா துறையையும் மோசமாக காட்டுகிறது." என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், பேட்டி அளித்த அவர், நடிகர் விஜய் மட்டுமல்ல யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பதாக தெரிவித்தார். மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நடிகர் அஜித் தெரிவித்த கருத்தை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.






