மதம், சாதி சார்ந்த கதை எழுதினால் இரண்டு பக்கமும் எழுத வேண்டும் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்

அலெக்ஸ் பாண்டியன் இயக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படம் நவம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது.
மதம், சாதி சார்ந்த கதை எழுதினால் இரண்டு பக்கமும் எழுத வேண்டும் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
Published on

ஶ்ரீ லட்சுமி ட்ரீம் பேக்டரி பேனரில் கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிக்கும் கிறிஸ்டினா கதிர்வேலன் திரைப்படத்தை எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார். கும்பகோணம் கல்லூரி பின்னணியில் நடைபெறும் கதையில் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், டி எஸ் ஆர், ஆருள் டி. ஷங்கர், சிலுமிஷம் சிவா, ரவி விஜே, கனா காணும் காலங்கள் புவனேஸ்வரி, சஞ்சய்வர்மன், ஆதித்யா டிவி விக்கி, சத்யா, மைக்கேல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் 'காலங்களில் அவள் வசந்தம்' கவுஷிக் ராம் நாயகனாக நடிக்க, 'கொண்டல்' மலையாள படத்தின் மூலம் கேரள ரசிகர்களின் இதயங்களோடு இணைந்த பிரதிபா தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகிறார். என். ஆர். ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கிறிஸ்டினா கதிர்வேலன் படம் நவம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, 'பிக்பாஸ்' பிரபலங்கள் விஷ்ணு, சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

நிகழ்வில், இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் பேசுகையில், கிறிஸ்டினா கதிர்வேலன் அழகான தலைப்பு. இது நான் இயக்கிய இது கதிர்வேலன் காதல் என்ற படத்தை நினைவு படுத்தியது. இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும், இயக்கிய இயக்குநருக்கும் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தன் இசையில் வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'சுந்தரபாண்டியன்' ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஆல்பமாக வெற்றி பெற்றவை. சமீபத்தில் 'அயோத்தி' படத்தில் கூட 'காற்று ஒரு பட்டம் போல..' பாடலை வெற்றி பெற வைத்தார். இந்தப் பாடலை அண்மையில் கேட்டேன். உடனே தொடர்பு கொண்டு ஒரு மணி நேரம் அந்தப் பாடலைப் பற்றி அவருடன் பேசினேன். மிகுந்த இசைஞானம் உள்ளவர்களால் தான் இது போன்ற பாடல்களை உருவாக்க முடியும். அவருக்குள்ள திறமைக்கு அவர் செல்ல வேண்டிய உயரம் இன்னும் அதிகம். இந்தப் படத்தில் இடம்பெற்ற திருவிழா பாடல் சிறப்பாக இருக்கிறது.

இந்தப் படத்தின் தலைப்பை பார்த்தவுடன் ஒரு கிறிஸ்தவ பெண்ணிற்கும், ஒரு இந்து பையனுக்கும் இடையே ஏற்பட்ட காதலாக தோன்றுகிறது. பொதுவாக ஒரு எழுத்தாளர் கதையை எழுதும்போது சமூகம் சார்ந்து சாதி சார்ந்து மதம் சார்ந்து கதை எழுதும்போது சாதாரண கதையை எழுதுவதை விட கூடுதல் பொறுப்புணர்வுடன் எழுத வேண்டி இருக்கும். காதலைப் பற்றி எழுதும் தருணத்தில் காதலர்களின் பெற்றோர்களை பற்றி எழுத தவறி விடுவோம். எங்கு கைத்தட்டல்கள் கிடைக்குமோ அதைத்தான் எழுதுவோம். அதே தருணத்தில் சமூகம் சார்ந்து அப்படித்தான் இந்த படத்தின் கதை இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் பிடித்த நியாயமான தீர்வும் இதில் இருந்தால் நிச்சயச்மாக வெற்றிப்படமாக இருக்கும். இந்த மேடையில் படத்தில் இடம்பெறும் உச்சகட்ட காட்சியை பற்றி பேசும்போது எமோஷனலாக பேசினார்கள். இது படம் பார்க்கும் ரசிகர்களையும் பாதிக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com