தனுஷ் குறித்து பரவிய செய்தி - முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த்

நடிகை மான்யா ஆனந்த் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
சென்னை,
'வானத்தைப் போல', 'அன்னம்', 'மருமகள்' போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை மான்யா ஆனந்த். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் தனக்கு வந்த அட்ஜெஸ்ட்மெண்ட் அழைப்பு குறித்துப் பகிரங்கமாகப் பேசி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது, தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி கடந்த சில மாதங்கள் முன்பு தனக்கு ஒரு நபர் மெசேஜ் செய்ததாகவும் அவர் தன்னை தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் இதில் நடிக்க தனுஷுடன் 'அட்ஜஸ்ட்மெண்ட்' செய்ய வேண்டும் என்று அவர் கூறியதாகவும் நடிகை மான்யா ஆனந்த அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனுஷின் மேலாளர் பெயரைச் சொல்லி நடிகை மான்யா ஆனந்த் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார். "தான் நேர்காணலில் தனுஷின் மேலாளர் ஷ்ரேயஸ் என்று கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், போலி நபராக இருக்கலாம் எனவும் தான் தெரிவித்து இருந்தேன். தனுஷின் மேலாளர் என்று திட்டவட்டமாக தான் குறிப்பிடவில்லை என மான்யா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். எனவே யாரும் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்" எனவும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.






