பழைய நண்பர்களைப் பார்க்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை - ரஜினிகாந்த் பேச்சு

நண்பர்கள் உரிமையோடு டேய் வாடா என கூப்பிடும் போது அதுவே ஒரு தனி சந்தோஷம் தான் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,
கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் 1975 - 1979 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்வில் இந்தக் கல்லூரியில் பயின்ற முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு, முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் காணொளி காட்சி மூலம் நடிகர் ரஜினிகாந்த் உரையாற்றினார்.
அந்த உரையில், சுமார் 50 வருடத்துக்குப் பிறகு எல்லோரும் சந்தித்திருக்கிறீர்கள். பழைய நண்பர்களைப் பார்க்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்தக் கல்லூரியில் படித்த பலர் பெரும் பெரும் பதவிகளில், உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு சைலேந்திரபாபு, இறையன்பு போன்றோரை குறிப்பிடலாம்.
நாம் பெரியவராக வளர்ந்ததற்குப் பிறகு, கணவன், அப்பா, தாத்தா, சார் என எத்தனை மரியாதையாக அழைத்தாலும், நம் பழைய நண்பன் பெயர் சொல்லி 'டேய்' என அழைக்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் எவ்வளவு வேலையில் இருந்தாலும், 6 மாதத்துக்கு ஒருமுறை, பெங்களூர் சென்று என்னுடன் பணியாற்றிய டிரைவர், கண்டெக்டர் போன்ற நண்பர்களை சந்திப்பேன்.
என்னுடைய சிவாஜி என்றப் பெயரை நானே மறந்துவிட்டேன். அவர்கள் என்னை டேய் சிவாஜி என அழைத்து பேசும்போது வரும் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை. நீங்கள் இப்போது சந்தித்துக்கொள்வது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சந்தித்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.






