தமிழில் மீண்டும் அனிமேஷன் படம் வருமா? ரசிகரின் கேள்விக்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் பதில்

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் ‘கோச்சடையான்' திரைப்படத்தை இயக்கி சவுந்தர்யா ரஜினிகாந்த் கவனம் ஈர்த்திருந்தார்.
சென்னை,
ஏ.ஐ. தொழில்நுட்பம் சினிமாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான ‘மகாவதார் நரசிம்மா' என்ற அனிமேஷன் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது.
ஆனால், 2014-ல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் ‘கோச்சடையான்' திரைப்படத்தை இயக்கி சவுந்தர்யா ரஜினிகாந்த் கவனம் ஈர்த்திருந்தார்.
அந்த வகையில் தமிழில் மீண்டும் ஒரு அனிமேஷன் படம் எடுக்கப்படுமா? தமிழில் முருகனின் ‘சூரசம்ஹாரம்' குறித்து ஒரு அனிமேஷன் படம் எடுத்தால் என்ன?' நிச்சயம் பெரிய வெற்றி கிடைக்குமே...', என்று சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் சவுந்தர்யாவிடம் கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு சவுந்தர்யா அளித்துள்ள பதிலில், ‘‘நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. அனிமேஷனுக்கு அதற்கான அங்கீகாரம் இறுதியாகக் கிடைத்துவிட்டது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று நான் உறுதியாக நம்புகிறேன். இறையருளால், இன்னும் பல அற்புதமான திரைப்படங்கள் வரவிருக்கின்றன’’, எனக் குறிப்பிட்டுள்ளார்.






