ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்


ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2023 6:36 PM GMT (Updated: 14 Oct 2023 4:29 AM GMT)

நாமக்கல்லில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ஓய்வூதிய இயக்கக இணை இயக்குனர் கமலநாதன் முன்னிலை வகித்தார். இதில் குடும்ப ஓய்வூதியம் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதிக்கு விண்ணப்பித்தல், விடுமுறையில் சென்ற நாட்களை முறைப்படுத்தி உத்தரவிட கோரிக்கை விடுத்தல், பனிக்காலத்தில் இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் மற்றும் இதர பணப்பலன்கள் கோரி விண்ணப்பித்தல் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை ஓய்வூதியர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலெக்டரிடம் வழங்கினார்கள்.

அதைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கலெக்டர் உமா பேசுகையில், ஓய்வூதியர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மனு மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் துரித நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு வழங்க வேண்டும். மேலும் அவர்கள் நம்மை போன்று அரசு துறையில் நமக்கு முன்பு பணியாற்றியவர்கள் என்பதை கருத்தில் கொண்டு முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் மாதவன் (பொது), அபர்ணா தேவி (கணக்குகள்), மாவட்ட கருவூல அலுவலர் கார்த்திகேயன், ஓய்வூதிய இயக்கக முதுநிலை அமைப்பாளர் ரிச்சர்ட் பேட்ரிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story