உப்பூரில் சதுர்த்தி விழா: சித்தி, புத்தியுடன் விநாயகருக்கு திருக்கல்யாணம்

திருக்கல்யாணம் முடிந்த பின்னர் மணக்கோலத்தில் சித்தி, புத்தியுடன் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது. சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் விநாயகர் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழாவின் 8-வது நாளான நேற்று விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதற்காக கோவிலின் அருகே உள்ள மண்டபத்தில் விநாயகர் சித்தி, புத்தியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மேளதாளம் முழங்க விநாயகர் சித்தி, புத்தி இருவருக்கும் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவிலின் செயல் அலுவலர் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாண பூஜைகளை மணிகண்டன் மற்றும் சந்திரசேகர சிவாச்சாரியார் ஆகியோர் செய்தனர். திருக்கல்யாணம் முடிந்த பின்னர் மணக்கோலத்தில் சித்தி, புத்தியுடன் விநாயகர் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.
தமிழகத்திலேயே விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.






