ஏகாதசி: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி ஏகாதசியை முன்னிட்ட கோம்புப்பாளையம் பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள கோம்புப்பாளையம் சீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் வைகாசி மாத ஏகாதசியை முன்னிட்டு சீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து துளசி இலை மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர்.
அதேபோல் குட்டக்கடை -புன்னம் சாலையில் உள்ள அனுமந்தராய பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு அனுமந்தராய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






