துளசி மாலை அணியும் முன் இதை செய்யுங்க..!

துளசி மாலை அணிந்தால் உடலின் குளிர்ச்சியையும், சூட்டையும் சம நிலையில் வைத்திருக்கும்.
இந்து மதத்தில் மிகவும் புனிதமான மூலிகையாக கருதப்படும் துளசி, பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானது. பெருமாள் வழிபாட்டில் துளசி நிச்சயம் இடம்பெறும். கோவில்களில் பகவானுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுவதுடன், பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்திலும் துளசி பயன்படுத்தப்படுகிறது. புனிதத்தன்மை கொண்ட துளசி மாலையை அணிபவர்களும் உண்டு. துளசிச் செடியின் தண்டுகள் மற்றும் வேர்களை வைத்து தயாரிக்கப்படுவதே உண்மையான துளசி மாலை ஆகும். இந்த மாலையை அணிந்து கொண்டால் வெற்றி நம்மை தேடி வரும் என்பது ஐதீகம்.
ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் துளசி மாலை முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையாகவே இந்த துளசி மாலையானது நம்முடைய உடலின் குளிர்ச்சியையும், சூட்டையும் சம நிலையில் வைத்திருக்கும்.
கடையில் இருந்து புதிதாக வாங்கி வரப்பட்ட துளசி மாலையாக இருந்தால், அதை அப்படியே கழுத்தில் அணிந்து கொள்ளக் கூடாது. முதலில் மஞ்சள் கலந்த தண்ணீரில் அதை நன்றாக ஊற வைக்கவேண்டும். இரண்டு மணி நேரம் மஞ்சள் தண்ணீரில் ஊறியபின்பு நல்ல தண்ணீரில் போட்டு கழுவி, அதன் பின்பு வீட்டு பூஜை அறையில் பெருமாள் படம் அல்லது மகாலட்சுமி படத்திற்கு சார்த்திவிட்டு இறைவனை நன்றாக வேண்டிக்கொண்டு அதன் பின்பு துளசி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டும்.
சிலர் இந்த மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளாமல் ஜெபம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். அல்லது மந்திரத்தை உச்சரிக்க கணக்கு வைத்துக் கொள்வதற்காகவும் பயன்படுத்துவார்கள். கழுத்தில் அணிந்து கொள்வதற்காக வாங்கினாலும் சரி. ஜெபம் செய்வதற்காக வாங்கினாலும் சரி மேற்குறிப்பிட்ட முறையை செயல்முறைபடுத்திய பின்புதான் துளசி மாலையை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும்.
ஜெபத்திற்காக எந்த ஒரு மாலையை பயன்படுத்தினாலும், நாம் ஜெபம் செய்யும்போது நம் கையில் அந்த மாலையை உருட்டும்போது, அது அடுத்தவர்களுடைய கண்ணிற்கு கட்டாயம் தெரியக்கூடாது.
பெண்களாக இருந்தால், தங்களுடைய முந்தானையில் ஜெபமணி மாலையை மறைத்துக்கொள்ள வேண்டும். ஆண்களாக இருந்தால் தங்களுடைய அங்கவஸ்திரத்தை கொண்டு மறைத்துக் கொண்டுதான் ஜெப மாலையை உருட்டவேண்டும் என்பது சாஸ்திரம். ஜெபமாலையை மறைத்து வைத்து ஜெபம் செய்வதற்கு ஏற்ற பைகளும் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.






