தெலுங்கு கார்த்திகை மாதம்: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி வில்வம், குங்குமார்ச்சனை

பாரம்பரிய முறைப்படி தொடங்கிய அர்ச்சனைகளை 27 நாட்களுக்கு நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கார்த்திகை மாதத்தையொட்டி 27 நாட்களுக்கு கோடி வில்வார்ச்சனை, கோடி குங்குமார்ச்சனை நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோடி வில்வார்ச்சனை, கோடி குங்குமார்ச்சனை நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.
பாரம்பரிய முறைப்படி தொடங்கிய இந்த அர்ச்சனைகள் 27 நாட்களுக்கு நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்காக, பல்வேறு வேதப் பள்ளிகளில் இருந்து வேதப் பண்டிதர்கள் கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
முன்னதாக சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சாமி-அம்பாளின் சக்தியை கலசத்தில் ஆவாஹனம் செய்தனர். அதன்பிறகு கோவிலின் பிரதான அர்ச்சகர் நிரஞ்சன் பூஜைகளை செய்தார். கோவில் வேதப் பண்டிதர் அர்த்தகிரிசுவாமி வேத மந்திரங்களை ஓதினார். மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சன்னதி எதிரே கோடி வில்வார்ச்சனையும், மூலவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் முன்பு கோடி குங்குமார்ச்சனையும் நடத்தப்பட்டது.
இதேபோல் தெலுங்கு கார்த்திகை மாதத்தின் 2-வது நாளான நேற்று மாலை கோவில் வளாகத்தில் உள்ள கோட்ட மண்டபம் அருகில் ஆகாய தீபம் ஏற்றி வேதப் பண்டிதர்கள், அதிகாரிகள் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
நிகழ்ச்சியில் கோவில் துணை செயல் அலுவலர் வித்யாசாகர் ரெட்டி, மேற்பார்வையாளர் நாகபூஷனம் யாதவ், ஆய்வாளர் வெங்கடசாமி மற்றும் வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.






