மூல நட்சத்திர தினம்.. சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு வழிபாடு

மூல நட்சத்திர தினமான இன்று ஆஞ்சநேயருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மூல நட்சத்திர தினம்.. சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு வழிபாடு
Published on

குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி அமைந்து உள்ளது. இங்கு 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இந்த ஆஞ்சநேயருக்கு மூலநட்சத்திர தினமான இன்று காலை சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி ஆஞ்சநேயருக்கு எண்ணெய், பால், தயிர், வெண்ணெய், நெய், களபம், சந்தனம், குங்குமம், விபூதி, பன்னீர், இளநீர், தேன் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி கவசம் சாத்தி அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்தன், சுசீந்திரம் கனிமலை சுவாமி கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்காளர் கண்ணன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com