புன்னைநல்லூரில் நாளை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நாளை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில். தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் இக்கோவிலில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளும், 4-ந்தேதி நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும், தொடர்ந்து, 5-ந்தேதி மகாலட்சுமி ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும், 6-ந்தேதி சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதியும் நடைபெற்றது.
7-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கஜ பூஜை நடத்தப்பட்டு, மாலை திருக்குடங்கள் யாகசாலை எழுந்தருளுதல் செய்யப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து சனிக்கிழமை காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர், மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகள், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடைபெற உள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, திரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி முடிவடைந்து, தீபாராதனை நடைபெறும்.
நாளை (10-2-2025) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக பெருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். இரவு மாரியம்மன் வீதி உலா நடைபெறுகிறது.