தாளவாடி அருகே ரங்கசாமி -மல்லிகார்ஜுனா கோவில் தெப்ப திருவிழா

நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தாளவாடி அருகே உள்ள திகினாரை கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தெப்ப திருவிழா விமரிசையாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டு நேற்று கணபதி பூஜையுடன் தெப்பத் திருவிழா தொடங்கியது.
இன்று காலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மதியம் 12 மணியளவில் சுவாமி வீதி உலா நடந்தது. ரங்கசாமி, மல்லிகார்ஜுனா உற்சவ மூர்த்திகள் மலர்களால் அலங்கரிக்கபட்ட சப்பரத்தில் எழுந்தருளி திகினாரை கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, தெப்பத் திருவிழா நடைபெறும் குளத்தை அடைந்தனர்.
அங்கு சிறப்பு பூஜைக்கு பிறகு சப்பரத்தை குளத்தின் நடுப்பகுதிக்கு பக்தர்கள் சுமந்து சென்றனர். அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் சப்பரம் வைக்கப்பட்டு தெப்ப உற்சவம் தொடங்கியது. தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகள், குளத்தை 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அப்போது குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து குளத்தின் மறுகரைக்கு சப்பரம் எடுத்து வரப்பட்டது. பக்தர்கள் பூக்கள் வைத்து தரிசனம் செய்தனர்.
தெப்ப திருவிழாவில் தாளவாடி, மெட்டல்வாடி, எரகனள்ளி, தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தாளவாடி ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






