சென்னிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை தண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22-ம் தேதி காப்புக்கட்டுடன் துவங்கியது. ஒருவார காலம் நடைபெற்ற விழாவின்போது நாள்தோறும் சின்னக்குமாரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று ஆறாம் நாள் நிகழ்ச்சியாக அடிவாரம் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது,
கந்த சஷ்டி விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட மணமேடைக்கு எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தைத் தொடர்ந்து தம்பதி சமேத சண்முகருக்கு பட்டாடை, நறுமணமிக்க வண்ணமலர்கள், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும், அதைத் தொடர்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது,
மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் மந்திரம் ஓத மங்கலநாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பின்னர் மஹாதீபாராதனை நடத்தப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானின் திருமண கோலத்தை தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மங்கல பிரசாதங்களும், திருமண விருந்தும் வழங்கப்பட்டது.
பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
கோபி பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. அதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






