அயோத்தி கோவிலில் ராமர் நெற்றியில் விழுந்த சூரிய திலகம்: பக்தர்கள் பரவசம்

ராம நவமி தினமான இன்று அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள் திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலையின் நெற்றியில் பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது.
அயோத்தி,
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி நடந்தது. இதன் பின், விழா நிறைவடைந்த மறுநாள் முதல், தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், ராமநவமி திருநாளான இன்று (ஏப்ரல் 06) அயோத்தி ராமர் கோயிலில் சரியாக மதியம் 12.00 மணிக்கு கருவறையில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிபடும் அரிய நிகழ்வு நடந்துள்ளது. சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது. அதனை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வு சில நிமிடம் நீடித்துள்ளது. இந்த அரிய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் ராமர் கோவிலில் கூடினர். அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்டு ராமர் மீதான தங்களின் அன்பை வெளிப்படுத்தி பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
அயோத்தி ராமர் கோவிலின் கருவறைக்குள் சூரிய ஒளி நேரடியாக நுழைய வழி இல்லை. இதனால், கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் அடங்கிய ஒரு விரிவான வடிவமைப்பு மூலம் பால ராமருக்கு 'சூரிய திலகம்' நிகழ்வை நிகழ்த்தி உள்ளனர். மூன்றாவது தளத்தில் இருந்து சூரிய ஒளிக்கதிர், கருவறையில் இருக்கும் பால ராமரின் நெற்றியில் சரியாக விழும் வகையில் செய்யப்பட்டுள்ளது.






