ஜெகதீப் தன்கர் பாதுகாப்பாக உள்ளாரா? உத்தவ் சிவசேனா கட்சி கேள்வி

சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ராவத், அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்
புதுடெல்லி,
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 22-ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல்நலக் காரணங்களைக் காட்டி ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்திருந்தார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே தன்கர் திடீரென ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பதவியை ராஜினாமா செய்த பின்னர் தன்கர் குறித்த எந்தத் தகவலும் இல்லை.
இந்த நிலையில், சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ராவத், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.அவர் எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் பலனளிக்காததால், இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
அமித் ஷாவுக்கு தான் எழுதிய கடிதத்தை, சஞ்சய் ராவத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஜெகதீப் தன்கர் அவருடைய இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பாதுகாப்பாக இல்லை என்றும் டெல்லியில் வதந்திகள் பரவி வருகின்றன.அவருடனோ அல்லது அவரது ஊழியர்களுடனோ எந்த தொடர்பும் இல்லை, இது மிகவும் கவலைக்குரிய விஷயம். முன்னாள் துணை ஜனாதிபதிக்கு என்ன நடந்தது? அவர் எங்கே? அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது? அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா? இந்தக் கேள்விகள் பற்றிய உண்மையை நாடு அறிய உரிமை பெற்றிருக்கிறது” என்ருதெரிவித்துள்ளார்.






