சபரிமலை கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று சாமி தரிசனம்

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலையில் கேரளா வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவரை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். பிறகு சாலை மார்க்கமாக கவர்னர் மாளிகைக்கு சென்ற அவர், இரவில் அங்கு ஓய்வெடுத்தார். சபரிமலை கோவிலில் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி திரவுபதி முர்மு அய்யப்பனை தரிசனம் செய்கிறார்.
இதற்காக இன்று காலை 9.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு பம்பையை சென்றடைகிறார். பிறகு பம்பையில் கணபதி கோவிலில் அவருக்கு இருமுடி கட்டும் சடங்கு நடக்கிறது.
இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சிறப்பு வாகனத்தில் அழைத்து செல்லப்படுகிறார். மதியம் 11.55 மணி முதல் 12.25 வரை சன்னிதானத்தில் அய்யப்பனை ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் செய்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






