இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 09-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 9 Feb 2025 8:13 PM IST
கேமேன் தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகி உள்ளது.
- 9 Feb 2025 7:07 PM IST
உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரஷிய அதிபர் புதினுடன் பேசியுள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
2022-ம் ஆண்டில் நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தேன் என்றால், 3 ஆண்டு கால போரானது ஒருபோதும் நடந்திருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
- 9 Feb 2025 6:50 PM IST
சதிஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படத்தின் பெயர் நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- 9 Feb 2025 6:49 PM IST
இந்தியா - இங்கிலாந்து மோதும் 2வது ஒருநாள் போட்டியில் மைதானத்தில் விளக்குகள் எரியாமல் ஆட்டம் தடைபட்டதால் ஆடுகளத்தை விட்டு வீரர்கள் வெளியேறினர்.
- 9 Feb 2025 6:44 PM IST
சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேசனல் பார்க் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் 31 பேரை, மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சிறப்பு அதிரடி படை உள்ளிட்ட வீரர்கள் இணைந்து இன்று காலை மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது சுட்டு கொன்றனர்.
இதற்காக சத்தீஷ்கார் முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய், பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். நம்முடைய வீரர்களை, அவர்களின் துணிச்சலுக்காக நாம் பாராட்டுவோம். இந்த வெற்றிக்காக வீரர்களை நான் வாழ்த்துகிறேன். 2 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று அவர் கூறியுள்ளார்.
- 9 Feb 2025 6:07 PM IST
விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 9 Feb 2025 5:51 PM IST
திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் பறவைகள் பூங்காவை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு ஊரக வளர்சி, ஊராட்சித்துறை சார்பில் ரூ.18.64 கோடியில் பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
- 9 Feb 2025 5:50 PM IST
மராட்டியத்தின் புனே நகரில் கொந்த்வா பகுதியில் என்.ஐ.பி.எம். சாலையில் அமைந்த குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று தீப்பற்றி கொண்டது. தீ மளமளவென கட்டிடத்தின் மேல்பகுதி வரை பரவியது. கரும்புகையும் சூழ்ந்து கொண்டது.
இந்த சம்பவத்தில், 2 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். மற்றொருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.