இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 May 2025 9:39 PM IST
காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்?
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் டிரோன்கள் மீண்டும் அத்துமீறியதாக ஏ.என்.ஐ. தகவல் தெரிவித்துள்ளது. காஷ்மீரின் சம்பா பகுதியில் ட்ரோன்களை இந்தியா இடைமறித்தபோது வெடிசத்தம் கேட்டதாக ஏ.என்.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி உரை நிகழ்த்தி முடித்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல் தாக்கி உள்ளது.
- 12 May 2025 9:06 PM IST
3 நாள் தாக்குதலில், பாகிஸ்தான் கடும் சேதத்தை சந்தித்துள்ளது - பிரதமர் மோடி
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,
3 நாள் தாக்குதலில், பாகிஸ்தான் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. நமது தாக்குதலால் அச்சமடைந்த பாக். நமது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தியாவின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல், தப்பிக்கும் முயற்சிகளில் பாக். இறங்கியது. இந்தியாவின் நடவடிக்கையால், பாகிஸ்தான் அதிர்ந்து போயுள்ளது. பயங்கரவாதிகள் மட்டுமல்ல, அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும் எதிரான போர் இது. நம் தாக்குதலில், பயங்கரவாதிகள் மட்டுமல்ல, அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களும் ஆடிப்போயுள்ளனர் என்றார்.
- 12 May 2025 8:50 PM IST
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஆரம்பம்தான் - பிரதமர் மோடி
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,
பஹகல்காம் தாக்குதல் தனிப்பட்ட முறையில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. குடும்பத்தினர் கண் முன்னே அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தியாவின் பதிலடி முற்றிலும் நியாயமானது. மகள்களின், தாய்மார்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை உலகம் அறிந்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஆரம்பம்தான். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல, மக்களின் உணர்வு, மக்களின் வைராக்கியம். மே 7 காலை நமது மன உறுதியின் விளைவை உலகமே பார்த்தது.
பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அனைத்தையும் தகர்த்தோம். யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள், பாரதம் இத்தகைய முடிவை எடுக்கும் என. தேசத்துக்கே முதலிடம் என்ற கொள்கைபடி, பயங்கரவாதிகள் முகாம்களை நொறுக்கினோம். பாரதத்தின் ஏவுகணைகள், ட்ரோன் விமானங்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தன என்றார்.
- 12 May 2025 8:29 PM IST
பயங்கரவாதத்தை இந்தியா இனி சகிக்காது - பிரதமர் மோடி
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,
இனி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்றால் அது பயங்கரவாத ஒழிப்பு மற்றும் காஷ்மீர் பற்றி மட்டுமே ரத்தமும், தண்ணீரும் ஒரே நேரத்தில் பாய்ந்து செல்ல இயலாது. உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களால் இந்தியா தமது தாக்குதலை தொடுத்துள்ளது. இந்தியா கொடுத்த பதிலடியால் தாக்குதலை நிறுத்துமாறு நம்மிடமே பாகிஸ்தான் கெஞ்சியது. இனி இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு பயங்கரவாத செயலும் போராகவே கருதப்படும். அணு ஆயுத மிரட்டல்களை கண்டு பாரதம் ஒரு போதும் அஞ்சாது. பயங்கரவாதத்தை ஒரு சிறுதும் இந்தியா சகித்து கொள்ளாது என்றார்.
- 12 May 2025 8:22 PM IST
அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் - பிரதமர் மோடி
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில்,
பாகிஸ்தானின் பகவல்பூர், முரிட்கே பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக செயல்படுகின்றன. வான் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி டிரோன்களை ஏவ முடியாத நிலைமை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. பயங்கரவாத செயல்களின் மூளையாக செயல்பட்டவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உள்ளனர். பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பாகிஸ்தான், அதற்கு மாறாக இந்தியா மீது தாக்குதல் தொடுத்தது. நாம் நடத்திய ஒரே தாக்குதலில் பயங்கரவாதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அழிக்கப்பட்டுள்ளனர். பகல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நமது படையினர் தக்க நடவடிக்கை எடுத்தனர். நவயுகபோர் முறைகளில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை எடுத்துக்காட்டி உள்ளோம். அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என்றார்.
- 12 May 2025 8:12 PM IST
பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நமது படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. பாதுகாப்பு படையினரின் பராக்கிரமம், துணிச்சல் நாட்டுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது. காஷ்மீர் தாக்குதல் மக்களை கலக்கமடையச்செய்தது. இது பயங்கரவாதத்தின் கொடூரமாகும். ஆபரேஷன் சிந்தூர் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- 12 May 2025 8:05 PM IST
ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு
பாகிஸ்தான் உடனான தாக்குதல் முடிவுக்கு வந்த நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். பாதுகாப்பு படையினரின் பராக்கிரமம், துணிச்சல் நாட்டுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகள்.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பிறகு முதல் முறையாக மக்களிடம் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
- 12 May 2025 7:52 PM IST
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முன்னெடுத்தது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டு, நாட்கள் சென்ற நிலையில் முதன்முறையாக, பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அவர் என்ன உரையாற்ற போகிறார் என்ற ஆவல் நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
- 12 May 2025 7:50 PM IST
இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதலை அமெரிக்கா நிறுத்தியது. மோதல் தொடர்ந்தால் வர்த்தகம் தொடராது என்று இரு நாடுகளிடம் தெரிவிக்கப்பட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்திவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
- 12 May 2025 7:15 PM IST
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.